Monday, 30 January 2017

முந்திரிக்கொத்து

                            
                          
                               முந்திரிக்கொத்து

தேவையானவை

பாசிப்பருப்பு       : 500 கிராம்
தேங்காய்         : ஒன்று
எள்              : 50 கிராம்
ஏலம்            : 2 ஸ்பூன்
வெல்லம்        : 1 கிலோ
மைதா மாவு     : 250 கிராம்
பச்சரிசி          : 100 கிராம்
சமையல் எண்ணை: தேவைக்கு

செய்முறை:

பாசிப்பருப்பை வாணலியில் பக்குவமாக வறுத்து,மாவு மில்லில்
திரித்து வைக்கவும். எள்ளு , தேங்காய் துருவியது, ஏலம் இரண்டு
ஸ்பூன் நெய் விட்டு வறுத்து அதை பாசிப்பருப்பில் கலந்து வைக்கவும்.

வாணலியில் சிறிது அள்வு தண்ணீர் விட்டு, வெல்லத்தை பொடி செய்து
பொட்டு கம்பிப்பாகு பதம் வரை காய்ச்சவும்.

வெல்லப்பாகை கலந்து வைத்த பருப்பில்  சிறிது சிறிதாக விட்டு, நெல்லி
அளவில் உருண்டை பிடித்து வைக்கவும்.

மைதா மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு
பக்குவத்தில் பிசைந்து வைக்கவும்.

பருப்பு உருண்டைகளை மூன்று மூன்றாக எடுத்து, கரைத்து வைத்த மைதா 
மாவில் முக்கி எடுத்து , வாணலியில் உள்ள எண்ணையில் போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்.

மிகவும் ருசியான முந்திரிக்கொத்து தயார்.


மோதகம்

                        மோதகம்
தேவையானவை:

பச்சரிசி            : 1 கப்
பாசிப் பருப்பு      : ¼ கப்
வெல்லம்          : ¾ கப்
நெய்                1 ஸ்பூன் 
தேங்காய்த் துருவல்  :1 ஸ்பூன்
ஏலக்காய் பொடி      : ½ ஸ்பூன்
செய்முறை:

அரிசி, பருப்பைத் தனித்தனியாக வறுத்து, ரவை போல உடைத்துக்
கொள்ளவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டி,
கொதிக்க விடவும். அரைத்த கலவையைப் போட்டு கிளறவும். தேங்காய்த்
துருவல், ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கெட்டியாகக் கிளறி, இறக்கவும்.
கலவையில் சிறிது எடுத்து கையில் சிறிது நெய் தடவிக் கொண்டு மோதக வடிவில் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான மோதகம் தயார். 

Saturday, 28 January 2017

அப்பம்

                                       அப்பம்

தேவையானவை:
அரிசி மாவு       : 200 கிராம்
தேங்காய்த்துருவல்: 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம்,உளுந்து : தலா ½ ஸ்பூன்
ஏலக்காய்         :  2
கோதுமை மாவு   : சிறிதளவு
எண்ணெய்         : தேவையான அளவு
செய்முறை:
வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து, தூசு போக வடிகட்டவும்.
அரிசி மாவை தண்ணீர் விட்டு கரைத்து , நீர்க்க இருந்தால் கோதுமை மாவை
சேர்த்தால் கெட்டியாகிவிடும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கரைத்த மாவை கரண்டியில் அள்ளி அப்பமாக ஊற்றவும். சிறு தீயாக இருந்தால் அப்பம் கருகாமல் பொன்னிறமாக வரும்.
சுவையான அப்பம் தயார்.                        

திருநெல்வேலி பற்றிய கவிதை

            திருநெல்வேலி

தென்றல் தவழ்ந்து வரும் தென் பொதிகை நெல்லை !
தேன்மதுரக் குயிலோசை கேட்குமிடம் நெல்லை!
வயலெல்லாம் நெல்லும், வழியெல்லாம் வாழையும்
விளைந்திருக்கும் அழகைக் காண்பது எங்கள் நெல்லை!

கடலோரம் உயர்ந்த பனை உண்டு! அதில்
கிடைக்கும் நுங்கின் சுவையோ இனிதுண்டு!
பதநீரின் சுவையோ கற்கண்டு! பனங்கிழங்கு
கிடைப்பதெல்லாம் பொங்கலுடன் மட்டும்!

தென்னை மரங்கள் உயர்ந்தோங்கி நிற்பதுவும்,
மாவின் மரங்கள் பரந்து, விரிந்து வளர்ந்ததுவும்
பொதிகையில் தோன்றி வழியெல்லாம் வளம் தந்து
நதியாகி, ஆறாகி , நட்ட பயிரெல்லாம் செழிக்க
ஒடிவரும், ஆடிவரும், அழகெல்லாம் கூடிவரும்!
நாடிவரும் மாந்தரெல்லாம் நாளெல்லாம் குளிக்கவரும்!
பாடிவரும் பொருணைநதி இருப்பது எங்கள் நெல்லை! 

நல்லவரும், மன வல்லவரும் வாழும் எங்கள் நெல்லை!
நம்பி வந்தவரை வடநாட்டு வணிகரை
வாழ வழி கொடுத்து, நெல்லையின் அல்வா என
உலகப் புகழ் பெற வைத்த ஊரல்லவா எங்கள் நெல்லை! 

கல்வியில் சிறந்த பள்ளிகள் , கல்லூரிகள் நிறைந்தது.
ஆன்மிகம், கோவில், திருவிழா எதிலும் சிறந்தது
சிறுவர், இளைஞர், முதியவர்  அனைவரும் மகிழ்ந்திட
கலைஞர்களும், கவிஞர்களும்  இருப்பது எங்கள் நெல்லை

குற்றால அருவி  பார்ப்பதில் சுகம், குளிப்பதில் சுகம்!,
குளித்தவுடன் மீண்டும் குளிப்பதில் அல்லவோ சுகம்!.

ஆறுபடை வீட்டில் ஆறுமுகன் இருப்பதுவும்
அதில் ஒன்று இருப்பது திருச்செந்தூரே!
அங்கே, கோவில் அழகா? கோவில் கொண்ட
கடற் கரை அழகா?
நீண்டு, பரந்த கடல் அழகா?
நீல நிற வானம் அழகா? அழகிய
உயர் கோபுரம் அழகா? திருச்செந்தூர் என்ற
ஊரே  அழகா? 
அழகு என்றால் முருகன்!
முருகன் என்றால் அழகு!
கொள்ளை அழகு எங்கள் முருகன்! அவனைப்
பார்த்தால் பசி தீரும்! பாவங்கள் தான் தீரும்!

உலகைக் காக்கும் உத்தமன், உயர்ந்தவன்
அவனே உன்னதமானவன்! - அவனை
உலகின் உயிர்களெல்லாம் வணங்கும்!
அற்புதம் கொண்டவன்! அகிலம் நிறைந்தவன்!
அந்தப் பெருமாளுக்கே நவ திருப்பதி தந்து,
பெருமை கொண்டது எங்கள் நெல்லை!

தோன்றிய உயிர்களெல்லாம்
அழிவது, விதியின் முடிவு!
அழிவில் தோன்றுவது புதுமை!
அழிவும் உலகில் அவசியம் என!
அகிலம் புரிந்தது, உண்மை!
அழிக்கும் ஆண்டவன் சிவனே!
அவன் இருக்கும் நவ கைலாயம்
இருப்பதுவும் எங்கள் நெல்லை!

விடுதலை வேண்டும் என்றான்!
வெள்ளையர்கள், நாட்டை விட்டு
ஓடுதல்  வேண்டும் என்றான்! அவன்தான்
வீர பாண்டிய கட்டபொம்மன்!
கெடுதலை உணர்வினர்
தறுதலை மதியினர்! வீரன்
உயிர் துடிக்க, உடல் துவள
தூக்கிலே இட்டனர்!அதைப்
பார்த்தவர் பதைத்தனர் 
கேட்டவர் விதிர்த்தனர்! அதன்பின்
தூங்கியவர் விழித்தனர்!
பகைவரை அழித்தனர்!
இந்த மாபெரும் வீரன்
பிறந்ததும், இருந்ததும், பின்
இறந்ததும் எங்கள் நெல்லை!

வீரத்துக்கு ஒரு கட்டபொம்மன்!
துணிவுக்கு ஒரு வ.உசி!
ரசிப்புக்கு ஒரு தி.கே.சி! 
இருந்தது  எங்கள் நெல்லை! 

பல்லாயிரம் மைல் கடந்து
வந்தது ஒரு தொல்லை !
பாரெல்லாம் வியக்க குரல்
தந்தது எங்கள் நெல்லை! 

பாரதியின் பாடல்கள் ஒரு பாமாலை!
பைந்தமிழுக்கு அது ஒரு பூமாலை!
வீரமிக்க பாடல்கள் - சுதந்திர
தாகமிக்க பாடல்கள்!  அவன்
திரு வள்ளுவனின் பிறப்பு!
கவி கம்பனின் மறுபிறப்பு!

இத்தனைப் புரட்சிப் பாடல்களை
இந்தியாவில் எவரும் பாடியதுமில்லை!
இத்தனை வீரம், இத்தனை துணிச்சல்
இந்தியாவில் எவருக்கும் இருந்ததுமில்லை!

கப்பலிலே வந்தவரை, தமிழ்க்
கப்பலோட்டி மிரட்டினார்! வ,உ.சி! தம்
உயிருக்குத் துணிந்தார்! - பின்
பொருள் எல்லாம் இழந்தார்! சிறையில்
உடல் நலமெல்லாம் இழந்தார்!
அக்கரையிலிருந்து வந்து, அவரைச்
செக்கு இழுக்கச் செய்தனரே!
கெடு மதியினர், கொடு மனதினர்
தம்முடைய நாட்டுக்கு
பெரும் இழுக்குச் செய்தனரே!  
அந்த நல்லவரை , உள்ளம்
நிறை  வல்லவரை
ஈன்றதும் எங்கள் நெல்லை!




மனிதனின் செயல்கள் இரண்டு!
ஒன்று புண்ணியம், மற்றது பாவம்!
புண்ணியம் செய்பவர் நல்லவர்!
பாவமது செய்பவர் அல்லவர்!
புண்ணியம் சேர நவ கைலாயமும்,
புண்ணியம் பெருக நவ திருப்பதியும்
பாவமது அகல ஒரு பாபவினாசமும்
இருப்பதுவும் எங்கள் நெல்லை - அந்த
இருவரும் வரும் இடம்
எங்கள் நெல்லை!

பற்றற்றவர் இருக்குமிடம் பாபவிநாசம்!-மனிதன்
பற்றறுக்க செல்லுமிடம் பாபவிநாசம்!
பாவங்கள் தொலைந்திட
ஒரு பாபவிநாசம்! அங்கு
படகிலும் செல்லலாம் ஒரு பாண தீர்த்தம் !
அக மகிழ்ந்து குளித்திட ஒரு
அகஸ்தியர் அருவி! இவை
எல்லாம் இருப்பதுவும் எங்கள் நெல்லை! 

எழில் மரங்களும், குயில் குரல்களும்,
கழல் ஒலிகளும், கடும் பனைகளும்,
பயிர் நடுவதும், களை எடுப்பதும்,
சிலை எழில்களும், ஒலி நயங்களும்,
மயில் நடங்களும், மலர்த் தடங்களும்,
மலர்ச் செடிகளும், மணமலர்களும்,
உயர் மலைகளும், உயிர் இனங்களும்,
பயிர் வளர்வதும், பயன் தருவதும்,
கதிர் எழுவதும், மதி மறைவதும்,
மதி எழுவதும், கதிர் மறைவதும்
இரு தலங்களும், பல நலன்களும் ,
இயைந்ததும், பின் அமைந்ததும் ,
இயற்கையாய் நதிக் கரையினிலே!      
தாமிரபரணிக் நதிக் கரையினிலே!  

இல்லாதது இல்லை என்ற பெருமை
இருப்பதுதான் எங்கள் நெல்லை!