Sunday, 3 February 2019

சில சமையல் / வீட்டுக் குறிப்புகள்


                சில சமையல் / வீட்டுக் குறிப்புகள்

1.  சேமியா பாயாசம் போது, குழைந்து விட்டால், இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித் தனியே வந்துவிடும்.

2. சப்பாத்தி இரவு வேண்டுமானால் காலையிலும், காலை வேண்டுமானால் இரவிலும் பிசைந்து உடனே குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விட்டு சப்பாத்தி சுடுவதற்கு ஒரு மணி நேரம்  முன் எடுத்து செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

3. இட்லிக்கு ஊற வைக்கும் போது, அரிசியை நன்றாகக் கழுவி விட்டு, சுடு தண்ணீரில் ஊற வைத்தால் இட்லி மிருதுவாகப் பஞ்சு போல வரும்.

4. காரக் குழம்பு/ வத்தல் குழம்பு இரண்டுக்கும் துவரம் பருப்புப் போட்டுத் தாளித்தால் குழம்பு மணமாக இருக்கும்.

5.  இஞ்சியை நறுக்கிய 9 மணி நேரத்திற்குள்ளும், பூண்டை நறுக்கிய ½ மணி நேரத்திற்குள்ளும் பயன் படுத்த வேண்டும்.

6. வாழைக்காய் நறுக்கும் போது ஏற்படும் கறையைப் போக்க, கஞ்சித் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கழுவ கறை மறைந்து விடும்.

7. தானியங்களை (பயறு வகைகள்) 8 மணி நேரம் ஊற வைத்து,  தண்ணீரை வடித்து, ஹாட் பேக்கில் போட்டு மூடி வைத்து, மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தாயார். முளை கட்டிய தானியங்களில் வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன.

8. பாகற்காய் குழம்பு வைக்கும் போது, அதில் ஒரு காரட்டையும் சேர்த்துப் போட்டால் குழம்பில் கசப்புத் தெரியாது.

9. மிளகாய் வற்றல் வறுக்கும் போது, அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.

10. பூண்டு உரிப்பதற்கு முன் குளிர்ந்த நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு ஊறிய பிறகு எடுத்தால் தோல் எளிதாக வந்து விடும்.

11. பஜ்ஜி மாவில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயை நன்கு காய்ச்சி சேர்த்த பிறகு அதில் பஜ்ஜி தயாரித்தால் எண்ணெய் ஒட்டாமலும், உப்பியும் வரும்.

12. கோதுமை மாவை அரைத்து சலித்ததும், சிறிது டேபிள் சால்ட்டைக் கலந்து வைத்தால் வண்டு வராது.

13. வாழைக்காயைத் தண்ணீரில் போட்டு வைத்தால் பழுக்காமல் புதியதாய் இருக்கும்.

14. ஃபிளாஸ்க்குகளை நீண்ட நாள் உபயோகப்படுத்தாமல் வைத்தி ருக்கும் போது அதில் சிறிதளவு சர்க்கரை போட்டு வைத்தால் அதில் துர் நாற்றம் வராது.

15. அப்பளம், வற்றல், வடகம்  இவற்றுடன் காய்ந்த மிளகாய் சிலவற் றையும் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

16. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையைத் தூவி பிஸ்கட்டை வைத்தால், பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

17. பருப்புப் பொடி அரைக்கும் போது, இரண்டு ஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாகவும் இருக்கும். ஜீரணத்திற்கும் நல்லது.

18. பலகாரங்கள் செய்ய்யும் போது, வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சும் போது, பாகு நன்றாகக் கொதித்து வரும் போது சிறிது பாலை ஊற்றுங்கள். வெல்லத்தில் உள்ள அழுக்குகள் மேலே மிதக்கும். அவற்றைத் தனியே எடுத்து விடலாம்.

19. கொழுக்கட்டை பிசையும் போது, நீருடன் சரிபாதி பால் ஊற்றினால், கொழுக்கட்டை கூடுதல் சுவையாகவும், வெண்மையாகவும் இருக்கும்.

20. பாத்திரத்தில் முதலில் சிறிது தண்ணீர் விட்டுப் பிறகு பால் விட்டுக் காய்ச்சும் போது, பாத்திரத்தில் பால் ஒட்டாது.

21. கண்ணாடி மற்றும் ஜன்னல்களைத் துடைக்கும் போது, துணிக்குப் பதிலாக நியூஸ் பேப்பர் வைத்துத் துடைத்தால் கண்ணாடியில் கீறல் விழுவதைத் தவிர்க்கலாம்.

22. வெண்ணெய் காய்ச்சும் போது அதில் முருங்கை இலை போட்டால் அல்லது இறக்கிய பின் அரை ஸ்பூன் வெந்தயம் போட்டால் நெய் கம கம என்று மணக்கும்.

23. துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஐந்து சொட்டு நல்லெண்ணெய் விட்டால் பருப்பு சீக்கிரம் வெந்து விடும்.

24. உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, முதலில் மிக்சியில் ஒரு ஸ்பூன் நெல்லெண்ணெய் விட்டு தடவிக் கொண்டு பிறகு உளுந்து போட்டு அரைத்தால் மிக்சி ஓரங்களில் மாவு ஒட்டாமல் வரும்.

25. மோர்க்குழம்பு வைக்கும் போது கடைசியில் சிறிதளவு பாலை ஊற்றி கொதிக்க வைத்தால் கூடுதல் சுவையாகவும், புளிப்பில்லாமலும் இருக்கும்.

26. பிரியாணி செய்ய்யும் போது ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டால் சுவையாகவும் இருக்கும். அரிசி உதிர உதிரியாகவும் இருக்கும்.

27. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால்  வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம்.

28. தோசை மாவு புளித்து விட்டதா ? சிறிது சுட வைத்த பால் கலந்து தோசை வார்த்தால் புளிப்பு தெரியாது..

29. இட்லி மாவு புளித்து விட்டால், அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கலக்கி வைத்தால், சிறிது நேரம் கழித்து மாவின் மேல் தண்ணீர் தெளிவாக நிற்கும். அதை வடித்து எடுத்து விட்டால் புளிப்பு போய் விடும்.

30. மாவில் சீடை செய்தபின், சீடையை ஊசியால் குத்திய பிறகு, எண்ணெயில் போட்டால் வெடிக்காமல் இருக்கும்.

31. துணிகளில் எண்ணெய்க் கறை பட்டுவிட்டால் விபூதியை அந்த துணியின் மீது கொட்டி நன்றாகக் கசக்கிய பிறகு துவைத்தால் கறை போய்விடும்.

32. காய்ந்த மிளகாயை வறுக்கும் போது, அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வறுத்தால் அதனுடைய காட்டம் தெரியாது. நமக்கு தும்மலும் வராது.

33. உருளைக் கிழங்கு வேக வைத்த நீரில் வெள்ளிப் பாத்திரங்களை சுத்தம் செய்தால் அழுக்கு போய் பளிச்சிடும்.

34. பலகாரங்கள் நமத்துப் போகாமலிருக்க கொஞ்சம் உப்பை முடிச்சுப் போட்டு அதனுடன் வைக்கவும்.

35. பட்டுப் புடவைகளை ஆண்டுக் கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் இருந்தால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி, நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.

36. தேங்காய், பொரிகடலை சேர்த்து அரைத்த சட்னி மீந்து போய் விட்டால் அதை சாம்பாரில் ஊற்றினால் சுவையாக இருக்கும்.

37. ஊறுகாயை பாட்டில்களில் போடுவதற்கு முன் வெது வெதுப்பான நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் விட்டு பாட்டில் முழுக்க அது பரவும் படி செய்து, பிறகு ஊறுகாயை போட்டு வைத்தால் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.

38. ஊறுகாய் செய்யும் போது, உப்பை லேசாக வறுத்துப் போட்டால், ஊறுகாயின் மீது வெண்மை நிறம் படியாது.  

39.இடியாப்ப மாவு பிசையும் போது, அரை டம்ளர் கொதிக்கும் பாலை விட்டுக் கிளறினால் நல்ல வெள்ளை நிறம் கிடைக்கும்; மிருதுவாகவும் இருக்கும்.

40. மிக்சி பிளேடு கூர்மையாக இல்லமலிருந்தால், அதில் சிறிதளவு கல் உப்பைப் போட்டு ஓட விடுங்கள். பிளேடு கூர்மையாகிவிடும்.

41. சர்க்கரை டப்பாவில் ஐந்து கிராம்புகளைப் போட்டு வைத்தால் எறும்புத் தொல்லை இருக்காது.

42. சப்பாத்தி, பூரிக்குப் பிசையும் போது, சிறிதளவு கடலை மாவையும் கலந்தால் சுவையாகவும், மொர மொரப்பாகவும் இருக்கும்.

43. தயிர் புளித்து விடாமல் இருக்க ஒரு சிறிய துண்டு  தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

44. காய்கறிகளை வேக வைக்கும் போது உப்பு போட்டால், அதிலுள்ள இரும்புச் சத்து வீணாகி விடுகிறது. எனவே காய்கறிகளை வேக வைத்த பின் உப்பு போட்டால் இரும்புச் சத்து வீணாகாது.

45. லட்டு பிடிக்கும் போது ஜீராவில் 50 கிராம் நெய் விட்டு பிடியுங்கள். லட்டு நெய்யில் பொரித்தது போலவே சுவையாக இருக்கும்.

46. குலோப்ஜாமூனுக்கு உருண்டைகளைப் பிடிக்கும் போது, கையில் நெய் தடவிக் கொண்டு பிடித்தால் கையில் ஒட்டாது. ஜாமூனும் மணமாக இருக்கும்.

47. பலகாரம் செய்யும் முன்பு, மாவில் சிறிது எண்ணெய் ஊற்றிப் பிசைந்து, எண்ணெயில் போடுங்கள். பலகாரம் அதிக எண்ணெய் குடிக்காது.

48. தட்டை மாவில் சிறிது எள்ளும், கறி வேப்பிலையும் சேர்த்துக் கொண்டால், நல்ல மணமாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.

49. பாதுஷா செய்ய்யும் பின், பூஸ்டை திக்காகக் கரைத்து, பாதுஷாவின் மீது தெளித்தால் வித்தியாசமான டிசைனில் பாதுஷா தயார்.

50. புழுங்கள் அரிசியைப் பாத்திரத்தில் சமைப்பது நல்லது. குக்கரில் சமைப்பது மாவுச் சத்தையும், கொழுப்பையும் நீக்காது.